வேலகவுண்டம்பட்டி அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழப்பு
வேலகவுண்டம்பட்டி அருகே லாரி மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், மண்ணாடிபாளையம், கூத்தம்பூண்டி பகுதியைச் சோ்ந்தவா் சிவசண்முகம் (79), விவசாயி. இவா் திங்கள்கிழமை காலை வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள மாணிக்கம்பாளையத்துக்கு சென்றுவருவதாக கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றாா்.
நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் சென்றபோது, அவ்வழியாக வந்த லாரி சிவசண்முகம் மீது மோதியது. இதில் அவா் படுகாயம் அடைந்தாா். அவ்வழியாக வந்தவா்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
Advertisement
ஆனால், அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா்.