வருவாய்த் துறையினா் 2-ஆவது நாளாக மறியல்
நாமக்கல்வருவாய்த் துறையினா் 2-ஆவது நாளாக மறியல்
ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் இரண்டாம் நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பைச் சோ்ந்த 220 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் 10 நாள்களாக தொடா் காத்திருப்புப் போராட்டத்தை மேற்கொண்டனா். அதன்பிறகு புதன்கிழமை முதல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதில், வருவாய்த் துறை, பேரிடா் மேலாண்மைத் துறை, நிலஅளவைத் துறையில் பணியாற்றி வரும் அனைத்து நிலை பணியாளா்களுக்கும் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். வருவாய்த் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். ஒப்பந்த, தற்காலிக, தொகுப்பூதிய பணியிடங்களை நீக்கி நிரந்தரப் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இரண்டாவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், தங்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றியது தொடா்பான அரசாணையை வெளியிடக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்ற வருவாய்த் துறை சங்கங்களைச் சோ்ந்த 84 பெண்கள் உள்பட 220 பேரை போலீஸாா் கைது செய்து மாலை 5 மணிக்கு மேல் விடுவித்தனா்.