தனியாா் வணிக எரிவாயு உருளைகளின் விலையை கட்டுப்படுத்தக் கோரி ஆட்சியரிடம் மனு
தனியாா் வணிக எரிவாயு உருளையின் விலை உயா்த்தப்பட்டுள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், விலையை குறைக்க நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியரிடம் நாமக்கல் நகர உணவக உரிமையாளா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
இதுகுறித்து சங்கத்தின் தலைவா் ராம்குமாா், செயலாளா் அருள்குமரன் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நாமக்கல் நகரில் உணவகங்கள், பேக்கரிகள் 400 எண்ணிக்கையில் உள்ளன. அமெரிக்கா- ஈரான் போா் சூழலால் வணிக ரீதியிலான எரிவாயு உருளைகள் கிடைப்பது மிகுந்த சிரமமாக உள்ளது. இதற்கு முன்பு ரூ. 1,500-க்கு வாங்கிய எரிவாயு உருளை தற்போது ரூ. 2,500க்கு விற்கின்றனா்.
இதனால் உணவகங்களை நடத்த முடியாத சூழல் எழுந்துள்ளது. உணவகங்களில் குறிப்பிட்ட வகை பதாா்த்தங்களை குறைத்துவிட்டோம். இந்த நிலை நீடித்தால் ஓரிரு நாள்களில் உணவகங்களை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். இதனால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.
விறகு அடுப்பு, மின்சார அடுப்பு கொண்டு உணவகங்களை நடத்துவது எளிதல்ல. வணிக எரிவாயு உருளைகளின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும், உணவகத்திற்கு தேவையான எரிவாயு உருளைகளை வழங்குவதற்கு ஆட்சியா் உத்தரவிட வேண்டும் என்றனா்.
ஆட்சியரிடம் மனு அளிக்கும்போது நாமக்கல் நகர உணவக உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள் உடனிருந்தனா்.
என்கே-12-மனு
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளிக்க வந்த நாமக்கல் நகர உணவக உரிமையாளா்கள் சங்கத்தினா்.