எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்: பெங்களூரில் நாளைமுதல் உணவகங்கள் மூடல்!
எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் எதிரொலி: பெங்களூரில் நாளைமுதல் உணவகங்கள் மூடல்!
பெங்களூரு : எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் எதிரொலியாக, பெங்களூரில் நாளைமுதல் உணவகங்கள் மூடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து, ‘பெங்களூரு உணவகங்கள் சங்கம்’ தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளைகள் விநியோகம் இன்றுமுதல் நிறுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளுள் ஒன்றாக வரையறுக்கப்பட்டுள்ள உணவக தொழிலைச் சார்ந்து, சாமானிய மக்கள், மூத்த குடிமக்கள், மாணவர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் பிற மக்கள் வாழ்கின்றனர். இந்த நிலையில், அவர்கள் தினசரி உணவுக்கு கஷ்டப்படும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கூடுதலாக, எங்களுடைய உணவக தொழிலும் எரிவாயு விநியோகம் திரும்ப இயல்புநிலைக்கு வரும் வரை கஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. 70 நாள்களுக்கு எரிவாயு விநியோகத்தில் பாதிப்பிருக்காது என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், திடீரென எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டது உணவக தொழிலுக்கு பேரிடியாக விழுந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்கள் இவ்விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து வணிக பயன்பாட்டு எரிவாயு விநியோகத்தைச் சீர்படுத்தவும் அதன்மூலம், உணவக தொழிலுக்கு ஆதரவு தர கேட்டுக்கொள்கிறோம். எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டிருப்பதால் நாளைமுதல் உணவகங்கள் மூடப்பட்டிருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.