பெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!
எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் எதிரொலி: பெங்களூரில் நாளை முதல் உணவகங்கள் மூடல்!
பெங்களூரு : எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் எதிரொலியாக, பெங்களூரில் நாளை(மார்ச் 10) முதல் உணவகங்கள் மூடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்கா, இஸ்ரேலின் கூட்டு தாக்குதல் நடவடிக்கைகளால், ஹோர்முஸ் நீரிணை வழித்தடத்தில் போக்குவரத்து மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உலக நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு வேகமாக அதிகாரித்து வருகிறது. இந்த நிலையில், இந்தியப் பெருநகரங்களில் சமையல் எரிவாயுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், பெங்களூரில் வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, பெங்களூரில் நாளை முதல் உணவகங்கள் மூடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
இது குறித்து, ‘பெங்களூரு உணவகங்கள் சங்கம்’ தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளைகள் விநியோகம் இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளுள் ஒன்றாக வரையறுக்கப்பட்டுள்ள உணவக தொழிலைச் சார்ந்து, சாமானிய மக்கள், மூத்த குடிமக்கள், மாணவர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் பிற மக்கள் வாழ்கின்றனர். இந்த நிலையில், அவர்கள் தினசரி உணவுக்கு கஷ்டப்படும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கூடுதலாக, எங்களுடைய உணவக தொழிலும் எரிவாயு விநியோகம் திரும்ப இயல்புநிலைக்கு வரும் வரை கஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. 70 நாள்களுக்கு எரிவாயு விநியோகத்தில் பாதிப்பிருக்காது என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், திடீரென எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டது உணவக தொழிலுக்கு பேரிடியாக விழுந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்கள் இவ்விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து வணிக பயன்பாட்டு எரிவாயு விநியோகத்தைச் சீர்படுத்தவும் அதன்மூலம், உணவக தொழிலுக்கு ஆதரவு தர கேட்டுக்கொள்கிறோம். எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டிருப்பதால் நாளை முதல் உணவகங்கள் மூடப்பட்டிருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு மட்டுமில்லாது மும்பை உள்பட நாட்டின் முக்கிய பெருநகரங்களில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
மும்பையில் ஹோட்டல்களுக்கான வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டிருப்பதாக பாதிக்கப்பட்ட உணவக உரிமையாளர்கள் தெரிவித்தனர். மேலும், வீடுகளிலும் சமையல் எரிவாயு எல்பிஜி சிலிண்டர் காலியான பின், முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கும் வழக்கமாக ஓரிரு நாள்களில் சிலிண்டர் விநியோகப்பட்டு வந்த நிலையில், இப்போது 8 நாள்கள் வரை வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டால், ஹோட்டல் உள்பட வணிக பயன்பாட்டு நிறுவனங்கள் கள்ளச்சந்தையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்குவதைத் தடுக்க, வாடிக்கையாளர்கள் சிலிண்டர் மறுமுறை புக்கிங் செய்வதற்கான கால அவகாசத்தை 21 நாள்களிலிருந்து 25-ஆக நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எல்பிஜி சிலிண்டர் ஒருமுறை முன்பதிவு செய்துவிட்டால் அதன்பின் அந்த வாடிக்கையாளர் அடுத்த 25 நாள்கள் கழித்தே மறுபடியும் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைக் கட்டுக்குள் வைக்க முக்கிய நடவடிக்கையாக அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, கனடா, நார்வே ஆகிய நாடுகளிலிருந்து எல்பிஜி வாங்க அரசு ஆயத்தமாகி வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
Bangalore Hotels Association releases a notice saying, Hotels will be closed from tomorrow due to the gas supply being cut off.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.