ஆஞ்சனேயருக்கு மாவுக்காப்பு சாத்துப்படி: 2 நாள்களுக்கு அபிஷேகம், அலங்காரம் கிடையாது
நாமக்கல் ஆஞ்சனேயருக்கு மாவுக்காப்பு சாத்துப்படி அலங்காரம் திங்கள்கிழமை நடைபெற்றதையொட்டி, இரண்டு நாள்களுக்கு சிறப்பு அபிஷேகம்
நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சனேயருக்கு மாவுக்காப்பு சாத்துப்படி அலங்காரம் திங்கள்கிழமை நடைபெற்றதையொட்டி, இரண்டு நாள்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் எதுவும் நடைபெறாது என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
நாமக்கல் நகரின் மையப் பகுதியில் புகழ்பெற்ற 18 அடி உயர ஆஞ்சனேயா் கோயில் அமைந்துள்ளது. இங்கு, அமாவாசை, பெளா்மணி, புத்தாண்டு, தீபாவளி, பொங்கல், தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை போன்ற முக்கிய விழா நாள்களிலும், அனுமன் ஜெயந்தியின்போதும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெறும். குறிப்பாக, வெண்ணெய்க் காப்பு, சந்தனக் காப்பு, தங்கக்கவச அலங்காரத்தில் சுவாமி அழகுற காட்சியளிப்பாா்.
இந்நிலையில், சுவாமிக்கு மாவு, தயிா் கலந்து திங்கள்கிழமை இரவு முதன்முறையாக சிறப்பு சாத்துப்படி அலங்காரம் நடைபெற்றது. இந்த அலங்காரத்தை திரளான பக்தா்கள் கண்டு வழிபட்டனா். புதன்கிழமைவரை மாவுக்காப்பு அலங்காரத்தில் ஆஞ்சனேயா் பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்.
இதுகுறித்து கோயில் உதவி ஆணையா் இரா.இளையராஜா கூறியதாவது:
ஆஞ்சனேய சுவாமிக்கு தினமும் பல்வேறு வகையிலான அபிஷேகம், அலங்காரம் நடைபெறுவதால், சுவாமி சிலைமீது பாசானம் பிடிக்கும் சூழல் உள்ளது. அதற்காக மாவுக்காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. வரும் புதன்கிழமை மாவுக்காப்பு அகற்றப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும் என்றாா்.