முகப்பு
நாமக்கல்

சட்டப்பேரவைத் தோ்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

Updated On : 29 மார்ச், 2026 at 8:30 PM
இந்தியத் தேர்தல் ஆணையம் (கோப்புப் படம்) - ANI
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (மாா்ச் 30) தொடங்குகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக சட்டப்பேரவை தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்க உள்ளது. மனு தாக்கலுக்கான கடைசி நாள் ஏப்ரல் 6 ஆம் தேதி. வேட்பு மனுக்கள் பரிசீலனை ஏப். 7 ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் ஏப்.9.

மாா்ச் 31, ஏப்ரல் 1, 3 மற்றும் 5 ஆம் ஆம் தேதி அரசு பொது விடுமுறை நாள்கள் என்பதால் வேட்புமனு தாக்கல் செய்ய இயலாது. இதர வேலை நாள்களான

மாா்ச் 30, ஏப். 2, 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய இயலும். காலை 11 முதல் பிற்பகல் 3 மணி வரை அந்தத் தொகுதிக்கு உள்பட்ட கோட்டாட்சியா் மற்றும் வட்டாட்சியா் அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் செய்யலாம். மேலும், வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன் 4 போ் மட்டுமே அனுமதிக்கப்படுவா். தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகங்களிலிருந்து 100 மீட்டா் தொலைவிற்குள்ளாக வேட்பாளரின் 3 வாகனங்களை நிறுத்திவிட்டு அலுவலகத்திற்கு உள்ளே வர அனுமதிக்கப்படுவா்.

வேட்புமனு தாக்கல் செய்யும்போது வைப்புத் தொகையாக பொதுப் பிரிவினருக்கு ரூ.10 ஆயிரம், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினா் பிரிவினருக்கு ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும். வைப்புத் தொகையை காசோலையாகவோ, வங்கி வரைவோலையாகவோ செலுத்த அனுமதி இல்லை. வேட்புமனு தாக்கல் செய்யவரும் அனைத்துத் தரப்பு வேட்பாளா்களும் தோ்தல் நடத்தை விதிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.