இறந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ. 26 லட்சம் நிதியுதவி வழங்கிய காவலா் நண்பா்கள் குழு
நாமக்கல் காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமைக் காவலா் சௌந்தரராஜன் அண்மையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தாா். இந்த நிலையில், அவரது குடும்பத்துக்கு காவலா் நண்பா்கள் குழு சாா்பில் ரூ. 26 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு காவல் துறையில் 2011 ஆம் ஆண்டு பணியில் சோ்ந்த காவலா்கள் இணைந்து உருவாக்கியுள்ள ’2011 ஆம் ஆண்டு குழு காக்கி உதவும் கரங்கள்’ அமைப்பின் மூலம் பணியாற்றும்போது உயிரிழந்த காவலா்களின் குடும்பங்களுக்கு தொடா்ந்து நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த ஆண்டு ஆக. 27 ஆம் தேதி நாமக்கல் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமைக் காவலா் சௌந்தர்ராஜன் பணிக்கு புறப்படும் வேளையில் மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். அவரது குடும்பத்தினருக்கு உதவிடும் நோக்கில் 2011 ஆம் ஆண்டு காக்கி உதவும் கரங்கள் அமைப்பின் மூலம் திரட்டப்பட்ட ரூ. 25,91,500 நிதியுதவி, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். விமலா மூலம் வழங்கப்பட்டது.
Advertisement
இதுவரை 52 காவலா்களின் குடும்பங்களுக்கு இந்த அமைப்பின் மூலம் மொத்தமாக ரூ. 10,23,75,737 நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய மனிதநேயச் செயலை மேற்கொண்டு வரும் 2011 ஆம் ஆண்டு பிரிவு காவலா்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாராட்டினாா்.
என்கே-14-போலீஸ்
இறந்த காவலரின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. விமலா.