வாழப்பாடி அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த அரியவகை குபேர பாம்பை வனத் துறையினர் மீட்டு, அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.
வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் வினோத தோற்றம் கொண்ட பாம்பு தவறி விழுந்து தத்தளித்து வருவதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்த வனச்சரகர் சந்திரசேகர் உத்தரவின்பேரில், வனக்காப்பாளர் முனீஸ்வரன், சந்தனக்காடு காவலர் முத்தையன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று, பாம்பை உயிருடன் மீட்டனர். மண்ணுளி பாம்பை போல உருவத்தில் சிறிதாக காணப்படும் அரிய வகையை சேர்ந்தது என கண்டறிந்தனர்.
ஆங்கிலத்தில் "ரெட் சேண்ட் போவா' எனக் குறிப்பிடப்படும் அந்த பாம்பை, வீடுகளில் வைத்து வளர்த்து வந்தால் செல்வம்உண்டாகும் எனவும், வசிய மருந்துகள் தயாரிக்கலாம் எனவும் மூடநம்பிக்கை நீடித்து வருவதாலும், பல லட்சம் ரூபாய்க்கு விலை போகிறது. அதனால், இவ்வகை பாம்புகள் தமிழகத்தில் "குபேர பாம்பு' என அழைக்கப்படுகிறது.
அதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, "இரண்டு அடி நீளத்திற்கு மட்டுமே வளரும் குபேர பாம்புகளை தேடி பிடிக்கும் கும்பல் பல லட்சத்திற்கு விற்பனை செய்து விடுகின்றனர். அதனால் இவ்வகை பாம்புகள் அரிதாகி வருகின்றன. எனவே, வாழப்பாடியில் பிடிபட்ட வயது முதிர்ந்த குபேர பாம்பை, யாரும் எளிதில் கண்டுபிடிக்க முடியாத அடர்ந்த வனப்பகுதியில் விட்டுள்ளோம்' என்றார்.