சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி புதன்கிழமை உயிரிழந்தார்.
மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அ.தாழையூர் கிராமம், மாங்குட்டைப்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி அழகுசாமி - நிர்மலா தம்பதியின் மகள் ரூபாஸ்ரீ (8). இவர் அப்பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாள்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி செவ்வாய்க்கிழமை சங்ககிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு புதன்கிழமை இறந்தார். இதுகுறித்து சுகாதாரத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.