ஜே.எஸ்.டபிள்யூ சார்பில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு
சேலம் மாவட்டம், மேச்சேரியில் உள்ள ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனம் சார்பில் ரூ.2.72 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டம், மேச்சேரியில் உள்ள ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனம் சார்பில் ரூ.2.72 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
மேச்சேரி அருகேயுள்ள காமனேரியில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தலைமை வகித்து, நலத் திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் தா.ரவிச்சந்திரன் ஆலையின் சமூக நலத்திட்ட உதவிகள் குறித்து பேசியதாவது: ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் நிறுவனம், ஆலையைச் சுற்றி உள்ள கிராம மக்கள் மேம்பாட்டுக்காக ஆண்டுதோறும் பல்வேறு சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் சுற்றுப்புற கிராமங்களில் மருத்துவம், பொறியியல், விவசாயம் மற்றும் கலை அறிவியல் பட்டபடிப்பு பயிலும் தகுதி வாய்ந்த ஏழை, எளிய மாணவ, மாணவியர்களின் கல்வி மேம்பாட்டுக்காக கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு கல்வி ஆண்டில் 74 மாணவ, மாணவியருக்கு ரூ.15 லட்சம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர் 8 பேருக்கு ரூ.1.60 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. கண்ணொளி திட்டம் மூலமாக பல்வேறு கிராமங்களில் கண்பரிசோதனை முகாம் நடத்தி 1,500 பேருக்கு இலவச சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. இவர்களில் 950 பேருக்கு ரூ.4.75 லட்சம் செலவில் இலவச மூக்கு கண்ணாடி வழங்கப்பட்டது. ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், மேட்டூரில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கும், எடப்பாடி அரசு மருத்துவமனைக்கும் ரூ.17 லட்சம் செலவில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. 2017-18 ஆண்டில் மட்டும் ரூ.2.72 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது என்றார்.