வெளிமாநில மதுப்புட்டிகள் கடத்தல்: 3 பேர் கைது
ஓமலூர் அருகே வெளிமாநில மதுப் புட்டிகளை கடத்திய 3 பேரை மதுவிலக்கு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
ஓமலூர் அருகே வெளிமாநில மதுப் புட்டிகளை கடத்திய 3 பேரை மதுவிலக்கு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
ஓமலூர் வட்டாரப் பகுதிகளில் அனுமதியின்றி நடத்தப்படும் மதுக் கடைகளில் அதிகாலை முதல் மது விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பெண்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுவது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து சந்துக் கடைகளை ஒழிக்கவும், சந்துக்கடைகளுக்கு மது பானங்கள் கொண்டு வருவது குறித்தும் நடவடிக்கை எடுக்கவும் மதுவிலக்கு பிரிவு போலீஸாருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜன் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து ஓமலூர் பகுதியில் மதுவிலக்கு பிரிவு போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். ஓமலூ ர் அருகே உள்ள முத்துநாயக்கன்பட்டி பகுதிக்கு புதுச்சேரியில் இருந்து மதுப் புட்டிகள் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கூடுதல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் மேற்பார்வையில் மதுவிலக்கு பிரிவு துணை கண்காணிப்பாளர் ராஜூ, ஆய்வாளர்கள் ரங்கசாமி, ராஜா ஆகியோரை கொண்ட தனிப்படை போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வந்த சொகுசுக் காரை நிறுத்தி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 328 மதுப் புட்டிகள் இருப்பது இருந்தது.
இதையடுத்து காரில் இருந்த 328 மதுப் புட்டிகள், கார் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸார், கடத்தலில் தொடர்புடைய மூவரையும் கைது செய்தனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஓமலூர் அருகேயுள்ள முத்தநாயக்கன்பட்டியை அடுத்துள்ள செம்மோட்டை சேர்ந்த ஸ்ரீதர் (29), அவரது அண்ணன் சிவக்குமார் (35), சங்ககிரி பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சந்திரன் (47) ஆகியோர் புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் இருந்து மதுப்புட்டிகளை மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்வது தெரிய வந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட மதுப்புட்டிகளின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என்று போலீஸார் தெரிவித்தனர்.