ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் மின் நுகர்வு 4% உயர்வு!
ஏப்ரல் மாதம் இந்தியாவின் மின் நுகர்வு 4.04 சதவீதம் அதிகரித்து 153.99 பில்லியன் யூனிட்டுகளாக பதிவானது.
புதுதில்லி: பொருளாதார விரிவாக்கம், ஏசி பயன்பாடு அதிகரிப்பு, வெப்ப அலை சூழல் உள்ளிட்டவையால் இந்தியாவின் மின்சாரத் தேவை அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது.
தரவுகளின் அடிப்படையில், கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் மின் நுகர்வு 4.04 சதவீதம் அதிகரித்து 153.99 பில்லியன் யூனிட்டுகளாக இருந்தது. குறிப்பாக மாதத்தின் முதல் பாதியில் பெய்த பருவம் தவறிய மழையின் காரணமாக மின் தேவை சற்று கட்டுக்குள் இருந்தது.
ஏப்ரல் 2025ல் நாட்டின் மொத்த மின் நுகர்வு 148.01 பில்லியன் யூனிட்டுகளாக இருந்தது. எனினும், வெப்ப அலை சூழல் நிலவியதால், மாதத்தின் பிற்பகுதியில் மின் தேவை அதிகரித்தது. இதன் விளைவாக, ஏப்ரல் 2025ல் 235.32 ஜிகாவாட்டாக இருந்த உச்சபட்ச மின் தேவை, கடந்த மாதம் 256.11 ஜிகாவாட் என்ற புதிய உச்சத்தை எட்டியது.
Advertisement
அதே வேளையில், மே 2024ல் உச்சபட்ச மின் தேவை, சுமார் 250 ஜிகாவாட் என்ற வரலாற்றுச் சாதனையை எட்டியிருந்தது. மின் அமைச்சகத்தின் கணக்கின் அடிப்படையில், 2026ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் உச்சபட்ச மின் தேவை 270 ஜிகாவாட்டை எட்டக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த கோடைக்காலத்தில், ஜூன் 2025ல் உச்சபட்ச மின் தேவை 242.77 ஜிகாவாட்டாக இருந்தது. எனினும், அரசு கணித்திருந்த 277 ஜிகாவாட் என்ற அளவை விட இது குறைவாகவே இருந்தது.
குறிப்பாக ஏப்ரல் மாதத்தின் முதல் பாதியில் பெய்த பருவம் தவறிய மழையானது, வெப்பநிலை உயர்வை ஓரளவுக்குக் கட்டுக்குள் வைத்திருந்ததாகவும், இதனால் ஏசி உள்ளிட்ட குளிர்சாதன உபகரணங்களின் பயன்பாடு எதிர்பார்த்ததை விடக் குறைவாகவே இருந்தது.
மே மாதம் முழுவதும் நாடு முழுவதும் வெப்ப அலை சூழல் நிலவும் என்றும், ஜூன் மாதத்தில் தென்மேற்குப் பருவமழை கேரளக் கடற்கரையை வந்தடைந்த பிறகே வெப்பத்தின் தாக்கம் குறையத் தொடங்கும் என்றும் வல்லுநர்கள் தெரிவித்தனர்.