காமலாபுரம் ஏரியில் தொழிலாளி மர்மச்சாவு
ஓமலூர் அருகே கூலித் தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓமலூர் அருகே கூலித் தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (60). கூலித் தொழிலாளி. இவருக்கு சாந்தி என்ற மனைவியும், முருகேசன், பச்சியப்பன் என இரு மகன்கள், தமிழரசி என்ற மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. ராமசாமியும், சாந்தியும் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் சனிக்கிழமை வீட்டில் இருந்து வெளியே சென்ற ராமசாமி மீண்டும் வீடு திரும்பவில்லை. ஞாயிற்றுக்கிழமை காமலாபுரம் ஏரியின் நடுவில் உள்ள மரத்தில் வேட்டியில் தூக்கிட்டு ஒருவர் சடலமாக தொங்குவது தெரியவந்தது. அதுகுறித்து விசாரித்த போது காணாமல்போன ராமசாமி என்பது தெரியவந்தது.
இதுகுறித்து ஓமலூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போதுதூக்கில் தொங்கிய நிலையில் இருந்த ராமசாமியின் முட்டிக்கால் தரையில் படும்படி இருந்தது. மேலும் உடலில் பல்வேறு இடங்களில் ரத்தக் காயங்கள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார், ராமசாமியின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து அவரது சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர். ராமசாமியை யாரோ கொலை செய்து தூக்கில் மாட்டிவிட்டு சென்றுள்ளனர் என்று உறவினர்கள், போலீஸாரிடம் தெரிவித்தனர்.