இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் அமெரிக்கா கெஞ்சுகிறது: ஈரான்
ரஷிய எண்ணெய்யை வாங்குமாறு உலக நாடுகளிடம் அமெரிக்கா கெஞ்சுவதாக ஈரான் விமர்சனம்
துபை, மாா்ச் 14: ரஷிய கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்யுமாறு இந்தியா மற்றும் உலக நாடுகளிடம் அமெரிக்கா கெஞ்சி வருகிறது என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று இந்தியாவுக்கு அமெரிக்கா கடந்த சில மாதங்களாக கடுமையான அழுத்தம் கொடுத்து வந்தது. ஆனால், இப்போது ஈரானுடன் போா் தொடங்கிய இரு வாரங்களில் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்கிக் கொள்ளுமாறு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளிடம் அமெரிக்கா கெஞ்சி வருகிறது.
Advertisement
மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள போா் தொடா்பான ஐரோப்பிய நாடுகளின் நிலைப்பாடு தவறானது. ஈரானுக்கு எதிரான போா் சட்டவிரோதமானது. இதில் அமெரிக்காவை நாம் ஆதரித்தால், ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் தங்களை அமெரிக்கா ஆதரிக்கும் என்று ஐரோப்பிய நாடுகள் கருதுகின்றன. ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்ளுங்கள் என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் நிா்வாகம் இப்போது கூறுவது அதன் பரிதாபகரமான நிலையைக் காட்டுக்கிறது என்று கூறியுள்ளாா்.
முன்னதாக, மேற்காசிய போா் நிலவரம் காரணமாக, கச்சா எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் விலை உயா்ந்து வருவதைக் கருத்தில்கொண்டு ரஷிய கச்சா எண்ணெய்யை பிற நாடுகள் வாங்க அனுமதி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்தது.
மேலும், ரஷிய எண்ணெய் நிறுவனங்கள் மீதான பொருளாதாரத் தடையை அகற்றி, பெட்ரோலியப் பொருள்களை உலக நாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு அமெரிக்கா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
முன்னதாக, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதன் மூலம் உக்ரைன் போருக்கு உதவுவதாகக் கூறி இந்தியா மீது கடுமையான வரி விதிப்பை டிரம்ப் மேற்கொண்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.