குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
ஆத்தூரில் குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆத்தூரில் குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆத்தூர் புதுப்பேட்டை 16-ஆவது வார்டு உழவர்சந்தை அருகில் உள்ள தட்டாஞ்சாவடியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் விநியோகம் சரிவர செய்யப்படுவதில்லை என நகராட்சியில் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் புதன்கிழமை அப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்த போது குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் சரிவர கிடைக்கவில்லை என தெரிகிறது. இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள், காலி குடங்களுடன் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல் ஆய்வாளர் என்.கேசவன், உதவி ஆய்வாளர் அமிர்தலிங்கம் ஆகியோர் விரைந்து சென்று பொதுமக்களிடம் சமரசப்பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிடவில்லை. இதையடுத்து ஆத்தூர் நகராட்சி அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று குடிநீர் விநியோகம் குறித்து தக்க நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தனர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் ஒரு மணிநேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.