வாழப்பாடியை அடுத்த திருமனூர் கிராமத்தில், வேளாண் துறையின் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை திட்டத்தின் கீழ், உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைப்பது மற்றும் கூட்டுப் பண்ணையம் குறித்து திங்கள்கிழமை பயிற்சி முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு, வட்டார வேளாண் உதவி இயக்குநர் சாந்தி தலைமை வகித்து, பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் நன்மை மற்றும் 100 விவசாயிகள் ஒன்றிணைந்து உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனம் அமைப்பதன் முக்கியத்துவம் குறித்து பயிற்சி அளித்தார்.
கோலாத்துக்கோம்பை நலம்தா உழவர் உற்பத்தியாளர் நிறுவன அமைப்பாளர் கருப்பையா, முதன்மை செயல் அலுவலர் வேல்முருகன் ஆகியோர், "உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைப்பதற்கு சேகரிக்க வேண்டிய அடிப்படை விவரங்கள், நிறுவனத்தை பதிவு செய்யும் முறை, அரசு மானியம் மற்றும் கடனுதவி பெறும் முறைகள், விவசாய விளைபொருள்களுக்கு மதிப்பு கூட்டி விலை நிர்ணயம் செய்யும் உத்திகள் மற்றும் குளிர்பதனக் கிடங்குகளை பயன்படுத்துவதன் அவசியம், பருப்பு மில் அமைத்தல், மலர் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து விளக்கமளித்தனர்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் தமிழ்ச்செல்வன், மக்காச்சோளத்தில் படைப் புழுக்கள் கட்டுப்படுத்தும் முறைகள், உழவன் செயலியை பயன்படுத்தும் விதம் குறித்து தெரிவித்தார். முகாமுக்கான ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலர் வினோத் மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.