சேலம் சூரமங்கலம் மண்டல அலுவலகத்தில் தூய்மையே சேவை உறுதிமொழி மாநகராட்சி ஆணையாளர் ரெ. சதீஷ் தலைமையில் சனிக்கிழமை ஏற்கப்பட்டது.
இதுதொடர்பாக ஆணையாளர் ரெ. சதீஷ் கூறியிருப்பதாவது:
தூய்மையே சேவை இயக்கப் பணிகள் செப்.15-ஆம் தேதி தொடங்கி, காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி வரை சேலம் மாநகராட்சி பகுதிகளில் நடைபெறுகின்றன. அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி வளாகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தொடர் வண்டி நிலையங்கள், பேருந்து நிலையங்கள், நீர் நிலைகள் போன்ற பொது இடங்களை தூய்மைப்படுத்துதல் வீடுகளில் கழிப்பறைகள் கட்டாதவர்களை கண்டறிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி , கழிப்பறைகளைக் கட்ட வைப்பது மற்றும் திறந்தவெளியில் மலம் கழிப்பதை அறவே தடுப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
திடக்கழிவு மற்றும் திரவக் கழிவு மேலாண்மை திட்டத்தைப் பாதுகாப்பான முறையில் செயல்படுத்துவது தொடர்பான பணிகளும் இக் காலக் கட்டத்தில் மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் ஜி. காமராஜ் , உதவி ஆணையாளர் ப.ரமேஷ்பாபு, மாநகர நல அலுவலர் கே.பார்த்திபன், உதவி செயற்பொறியாளர் வி. திலகா, உதவி வருவாய் அலுவலர் எ.எம். குமார், சுகாதார அலுவலர் எம். மணிகண்டன், சுகாதார ஆய்வாளர்கள் வீ.சரவணன், எ.பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.