ஓமலூர் அருகே பொங்கல் பண்டிகைக்காக வெல்லம் தயாரிக்கும் கரும்பு ஆலைகளில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு செய்து 5,200 கிலோ வெள்ளைச் சர்க்கரையை பறிமுதல் செய்தனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி, காமலாபுரம் பகுதியில் உள்ள கரும்பாலைகளில் வெள்ளைச் சர்க்கரை, சூப்பர் பாஸ்பேட் உரம் உள்ளிட்ட ரசாயன பொருள்களை கலந்து வெல்லம் தயாரிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் சென்றுள்ளன. இதைத் தொடர்ந்து மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி மாரியப்பன் தலைமையிலான அதிகாரிகள், திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது காமலபுரம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர், பிரசன்னா, முருகேசன் ஆகியோரின் ஆலைகளில் சர்க்கரையை கரைத்து வெல்லம் தயாரிப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மூவரின் ஆலைகளில் இருந்தும் 5,200 கிலோ வெள்ளை சர்க்கரை, 5,280 கிலோ கலப்பட வெல்லம், 30 கிலோ சூப்பர் பாஸ்பேட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 3 லட்சத்து 60 ஆயிரம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அதன் உணவு மாதிரி எடுத்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறும்போது விடுமுறை தினத்தில் அலுவலர்கள் ஆய்வுக்கு வர வாய்ப்பில்லை என்று கலப்பட வெல்லம் தயாரிக்க முற்படுகின்றனர்.பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கலப்பட வெல்லம் தயாரிப்பதைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்பான வெல்லம் நுகர்வோருக்கு கிடைக்கும் வகையில் ஆய்வுகள் செய்யப்பட்டதாகத் தெரிவித்தனர். தொடர்ந்துஅதுபோன்ற ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர்.