சேலத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் கனகராஜ், விபத்தில் தான் இறந்தார் என சேலம் சரக டி.ஐ.ஜி. செந்தில்குமார் தெரிவித்தார்.
இது தொடர்பாக, அவர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே சமுத்திரம் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (36). இவர் கடந்த 2017 ஏப். 28-ஆம் தேதி இரவு 8.45 மணிக்கு சேலம் -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சந்தனகிரி பகுதியில் வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்தார். மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டு தவறான பாதையில் வலது பக்கமாக வந்த கார் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது.
சம்பவ இடத்துக்கு சென்று சிறப்பு உதவி ஆய்வாளர் சோதனை செய்ததில், கனகராஜ் மது போதையில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது முழுக்க சாலை விபத்தால் நிகழ்ந்தது. தற்போது அவரது சகோதரர் தனபால் மாறிமாறி பேசி வருகிறார். அவர் இதுகுறித்து போலீஸில் புகார் அளித்தால் விசாரணை நடத்தப்படும் என்றார்.
பேட்டியின் போது, சேலம் மாவட்ட எஸ்.பி. தீபா கனிகர், ஆத்தூர் டி.எஸ்.பி. பொன் கார்த்திக் ஆகியோர் உடனிருந்தனர். விபத்தில் இறந்த கனகராஜ், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.