ஆத்தூர் தேசிய புறவழிச்சாலையில் இரு லாரிகள் சனிக்கிழமை நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஓட்டுநர்கள் படுகாயம் அடைந்தனர்.
சென்னையில் இருந்து குளிர் பானங்களை ஏற்றிக் கொண்டு சேலம் நோக்கி புறப்பட்ட லாரியை, நாமக்கல் மாவட்டம், பொட்டிரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் பெரியசாமி (55) ஓட்டி வந்தார். அதேபோல சேலத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி, விழுப்புரம் மாவட்டம் அகரகோட்டலம் பகுதியைச் சேர்ந்த பாண்டுரங்கன் மகன் சேட்டு (36) என்பவர் லாரியை ஓட்டிச் சென்றுள்ளார். இந்த இரு லாரிகளும் சனிக்கிழமை காலை ஆத்தூர் தேசிய புறவழிச் சாலையில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் இரு லாரியின் ஓட்டுநர்களும் பலத்த காயம் அடைந்தனர் . இதையடுத்து இருவரும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் என்.கேசவன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.