சேலத்தில் கடத்திச் செல்லப்பட்ட திமுக கிளைச் செயலரை சித்தூருக்கு அழைத்துச் சென்று விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
சேலம் சிவதாபுரம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (45), பனங்காடு திமுக கிளைச் செயலராக உள்ளார். மேலும், வெள்ளிப் பட்டறை நடத்தி வருவோருக்கு கடன் அளித்தல், ஏலச்சீட்டு நடத்துதல் போன்ற தொழில்களையும் செய்து வருகிறார்.
இந்த நிலையில், நாகராஜ் ஞாயற்றுக்கிழமை இரவு தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, 5 பேர் கொண்ட கும்பலால் கடத்திச் செல்லப்பட்டார். புகாரின் பேரில், மாநகர காவல் துணை ஆணையர் பி.தங்கதுரை, ஆய்வாளர் செந்தில் உள்ளிட்டோர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், நாகராஜ் செவ்வாய்க்கிழமை அதிகாலை வீடு திரும்பினார். இதையறிந்த போலீஸார் நாகராஜை சூரமங்கலம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். அப்போது, தன்னை 5 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி சித்தூருக்கு அழைத்துச் சென்று ரூ.25 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், தற்போது பணம் ஏதும் இல்லை எனக் கூறியதால், போலீஸில் எதுவும் தெரிவிக்கக் கூடாது எனக் கூறி, சித்தூரில் இறக்கி விட்டுச் சென்றதாகவும், அங்கிருந்து பேருந்து மூலம் சேலம் வந்ததாகவும் நாகராஜ் தெரிவித்தார்.
இந்த நிலையில், நாகராஜை சித்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர். மேலும், இந்த விசாரணையில் நாகராஜை கடத்தியது யார்? எதற்காக கடத்தினார்கள்? கடத்தியவர்கள் நாகராஜனால் ஏமாற்றப்பட்டவர்களா? என்பது குறித்த தகவல்கள் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.