ஓமலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் பள்ளி மாணவ-மாணவியருக்கு விழிப்புணர்வு பிரசாரம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.
ஓமலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் பள்ளிகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஓமலூர் அருகே வேலகவுண்டனூர் விஸ்டம் கேட்ஸ் மெட்ரிக். பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பள்ளி முதல்வர் ரித்திகா தலைமையில் ஓமலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் மீனா குமாரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தில் அதிகமான சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இந்திய தேசிய குற்றவியல் அறிக்கையின்படி ஆண்டு தோறும் 65 ஆயிரம் பேர் சாலை விபத்தால் உயிரிழக்கின்றனர். இதில், 2017-ஆம் ஆண்டில் மட்டும் 18 வயதுக்குக் குறைவான மாணவர்கள் 569 பேர் இறந்துள்ளனர். இதற்கு சாலை விதிகளை மீறுவதே முக்கிய காரணமாகும். எனவே, அனைத்துப் பள்ளிகளிலும் சாலை பாதுகாப்புத் திட்டம், சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடுதல், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், சாலை பாதுகாப்பு மன்றம் உருவாக்குதல் என பல்வேறு திட்டங்களைப் பள்ளிக் கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி விதிகளை பின்பற்றுதல் தொடர்பாக உறுதிமொழியும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த உறுதிமொழியை 2019-20-ஆம் கல்வியாண்டு முதல் ஒவ்வொரு வாரமும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உறுதிமொழியை அனைத்து மாணவர்களும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றார் அவர். அனைத்து மாணவ-மாணவிகளும் சாலைப் பாதுகாப்பு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.