சேலம் அருகே பெண்ணிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளரைப் பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் செந்தில்குமார் வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
சேலம் வீராணம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக (எஸ்.எஸ்.ஐ) கலைச்செல்வன் என்பவர் பணியாற்றுகிறார். இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றியபோது, ஒரு பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து தகராறு செய்ததாகவும், அவரது கணவரை அடித்து உதைத்ததாகவும் புகார் கூறப்பட்டது. இதையடுத்து, வீராணம் காவல் நிலையத்துக்கு அவர், இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னர் மீண்டும் அதே பெண்ணிடம் சிறப்பு உதவி ஆய்வாளர் கலைச்செல்வன் தகராறு செய்ததோடு, அந்தப் பெண்ணின் மகள், உறவினரை கடுமையாகத் தாக்கியதாகத் தெரிகிறது.
இதுகுறித்து அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார், இதுகுறித்த அறிக்கையை, மாநகர காவல் ஆணையர் செந்தில்குமாரிடம் அண்மையில் வழங்கினர். இதையடுத்து, கலைச்செல்வனைப் பணியிடை நீக்கம் செய்து, மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் வியாழக்கிழமை உத்தரவிட்டார்.