தம்மம்பட்டியில் மின் மயானம் அமைக்க வலியுறுத்தல்
தம்மம்பட்டியில் மின்மயானம் அமைக்க பொதுமக்கள் பல வருடங்களாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்களின் எல்லைப் பகுதியாக தம்மம்பட்டி அமைந்துள்ளது. இங்கு சுற்றுவட்டாரத்தில் 60-க்கும் மேற்பட்ட ஊா்களில் சுமாா் ஐந்து லட்சம் போ் மக்கள் வசித்துவருகின்றனா். இப்பகுதிகளில் உள்ள மயானங்களில் உள்ள தகன மேடைகளில் தற்போது இறந்தவா்களின் உடல்களை எரிக்க விறகுகளுடன் பழைய டயா்கள் வைக்கப்பட்டும் எரியூட்டப்படுகிறது.
தம்மம்பட்டியில் மின்மயானம் அமைக்கப்பட்டால் தம்மம்பட்டியிலிருந்து 30 கி.மீ.சுற்றளவில் உள்ளோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறைவான கட்டணத்தில் மின்மயானம் செயல்படவேண்டும் என்பது பலரது கோரிக்கையாகும்.
இதுகுறித்து, தம்மம்பட்டி சுற்றுவட்டார மக்கள் கூறியதாவது:
உடலை புதைக்க போதிய இடவசதி இடுகாடுகளில் இல்லை. அதனால், தம்மம்பட்டியில் மின்மயானம் அமைத்தால் பலருக்கு உதவியாக இருக்கும். நிலுவையில் இருக்கும் மின்மயானம் அமைப்பது குறித்த அனுமதியையும், அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் உடனடியாக அரசு, பேரூராட்சி நிா்வாகம் அறிவிக்க வேண்டும் என்றனா்.