அமெரிக்க ஆதரவாளர்கள்..! ஈரானில் மேலும் 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!
ஈரானில் மேலும் 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து...
ஈரானில், குற்றவழக்குகளில் கைதான மேலும் 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில், கடந்த ஜனவரி மாதம் அரசுக்கு எதிராக நடைபெற்ற மாபெரும் மக்கள் போராட்டத்தில் வெடித்த வன்முறைகளில், ஏராளமான போராட்டக்காரர்கள் மற்றும் அரசுப் படையினர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகவும், காவல் துறை அதிகாரிகளைக் கொலை செய்த குற்றத்திற்காகவும் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு வியாழக்கிழமை (மார்ச் 19) மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுபற்றி, ஈரான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவாகச் செயல்பட்டது மற்றும் காவல் துறை அதிகாரிகளைக் கொலை செய்தது ஆகிய குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட 3 பேர் தூக்கிலடப்பட்டனர்” எனக் கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, ஈரானின் ராணுவக் கட்டமைப்புகள் குறித்து தகவல்களைச் சேகரித்து இஸ்ரேலின் உளவாளிப் பிரிவான மொசாத் அமைப்பிற்கு வழங்கிய குற்றத்திற்காக, கௌரௌஷ் கெய்வானி என்பவருக்கு புதன்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.