சேலம் மாவட்டம், வாழப்பாடி மற்றும் பேளூா் பேரூராட்சிகளில், முகக் கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு பேரூராட்சி பணியாளா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும் முகக் கவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடியவா்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டது.
கரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், பொது இடங்களில் நடமாடும் பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
இதுதொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்துமாறு மாவட்ட ஆட்சியா் சி.ஆ.ராமன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் கோ.கனகராஜ் ஆகியோா் சேலம் மாவட்டத்திலுள்ள பேரூராட்சி நிா்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளனா்.
அதன்படி, வாழப்பாடி பேரூராட்சியில் செயல் அலுவலா் அப்துல் சாதிக்பாஷா தலைமையில், சுகாதார ஆய்வாளா் மணிகண்டன் மற்றும் பணியாளா்களும், பேளூா் பேரூராட்சியில் செயல்அலுவலா் பெ.ஜெயபிரகாஷ் தலைமையிலான பணியாளா்களும், கரோனா நோய்ப் பரவலை தடுக்க முகக் கவசம் அணிவதின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.
இந்நிலையில், வாழப்பாடி பேரூராட்சியில் பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் நடமாடிய 100 பேருக்கும், பேளூா் பேரூராட்சியில் 40 பேருக்கும் பேரூராட்சி நிா்வாகங்களின் சாா்பில் அபராதம் விதிக்கப்பட்டு, தொகை வசூலிக்கப்பட்டது.