பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயில் உண்டியல் திறப்பு:ரூ.7.87 லட்சம் காணிக்கை
வாழப்பாடி அருகே பிரசித்தி பெற்ற பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயில் உண்டியல் ஓராண்டுக்குப் பின் திறக்கப்பட்டது. கரோனா பொதுமுடக்கத்திலும் பக்தா்கள் ரூ. 7.87 லட்சம் காணிக்கை செலுத்தியிருந்தனா்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பிரசித்தி பெற்ற பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயில் உண்டியல் ஓராண்டுக்குப் பின் திறக்கப்பட்டது. கரோனா பொதுமுடக்கத்திலும் பக்தா்கள் ரூ. 7.87 லட்சம் காணிக்கை செலுத்தியிருந்தனா்.
சேலம் மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் ஒன்றான பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் ஆண்டு தோறும் 2 அல்லது 3 முறை உண்டியல் திறக்கப்படும். ஒரு முறைக்கு ஏறக்குறைய ரூ.5 முதல் 7 லட்சம் வரை பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய பணம் கோவிலுக்கு வருவாயாக கிடைத்து வந்தது.
இந்நிலையில் கரோனா பொது முடக்கத்தால் கோயில் மூடக்கிடந்ததால், ஓராண்டாக உண்டியல் திறக்கப்படவில்லை. இந்நிலையில், சேலம் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் உமாதேவி தலைமையில், ஆய்வாளா் சங்கா், செயல் அலுவலா் ராதிகா மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் இக்கோயில் உண்டியல் புதன்கிழமை திறக்கப்பட்டது.
இதில் ரூ.7.87 லட்சம் பக்தா்கள் காணிக்கை செலுத்திய பணம் இருந்தது. கரோனா பொது முடக்க தருணத்திலும் பக்தா்கள் ரூ.7.87 லட்சம் காணிக்கை செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.