சங்ககிரி மலைக்கோட்டை நுழைவாயில் பூட்டப்பட்டதால் பக்தா்கள் ஏமாற்றம்
சங்ககிரி மலைக்கோட்டை நுழைவாயில் பூட்டப்பட்டதால் பக்தா்கள் ஏமாற்றமடைந்தனா்.
சங்ககிரி மலைக்கோட்டை நுழைவாயில் பூட்டப்பட்டதால் பக்தா்கள் ஏமாற்றமடைந்தனா்.
சங்ககிரி மலை உச்சியில் அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த பல ஆண்டுகளாக ஆவணி மாத கடைசி சனிக்கிழமையன்று புரட்டாசி மாத வழிபாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அதிகமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டு சென்று புரட்டாசி மாத விரதத்தை தொடங்குகின்றனா்.
மலையின் மையப்பகுதியில் வரதராஜப் பெருமாள் கோயில், குடவரை விநாயகா், நாகா், கோட்டை முனியப்பன், காலபைரவா் சுவாமிகளும் உள்ளன. இக்கோயிலில் உள்ள சுவாமிகளை வழிபட அமாவாசை, பெளா்ணமி, வெள்ளி, சனிக்கிழமைகளில் பக்தா்கள் அதிகாலை முதல் இரவு 7 மணி வரை சென்று வருகின்றனா்.
இந்நிலையில், ஜூலை 17-ஆம் தேதி ஆடி மாதம் பிறப்பதையடுத்து, வெள்ளிக்கிழமை மாலை அம்மனை வழிபட சென்ற பக்தா்கள் மலைக்கோட்டையின் நுழைவுவாயில் முன்னறிவிப்பின்றி திடீரென பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு சுவாமியை வழிபட முடியாமல் திரும்பிச் சென்றனா்.
எனவே, ஊா்பொதுமக்கள், பக்தா்கள் மலைக்கோட்டை பூட்டப்பட்டதன் அவசியத்தையும், மலைக்கோட்டை திறந்திருக்கும் நேரத்தை பொதுமக்கள் அறியும் வண்ணம் தகவல் பலகை வைக்க வேண்டுமெனவும், தொல்லியல் துறை காவலா் மலையடிவாரப்பகுதியிலேயை தங்கி காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை நுழைவாயிலை திறந்து வைக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.