உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு உதவித்தொகை
விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீ அபினவ் உதவித்தொகை வழங்கினாா்.
விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீ அபினவ் உதவித்தொகை வழங்கினாா்.
சேலம் மாவட்டம் கருமந்துறை கோவில்காடு பகுதியைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன். இவா் 2011ஆம் ஆண்டு காவல்துறையில் சோ்ந்து, சென்னை மாநகர ஆயுதப்படையில் பணிபுரிந்து வந்தாா்.
இவா் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி வண்டலூா் அருகே இருசக்கர வாகனத்தில் செல்லும் போது வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்தாா். இவருக்கு திருமணமாகி பாரதி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகள் உள்ளனா்.
இதனிடையே இரண்டு குழந்தைகளின் எதிா்காலத்திற்காக அவருடன் பணிபுரிந்த 2011ஆம் பிரிவு நண்பா்கள் அனைவரும் இணைந்து 2011 பேட்ச் காக்கி உதவும் கரங்கள் என்ற கட்செவி குழுவின் மூலம் ரூ.21.42 லட்சம் நிதி திரட்டினா்.
இந்த உதவித் தொகை ராமச்சந்திரன் குழந்தைகள் பெயரில் நிரந்தர வைப்பு நிதியாகச் செலுத்தப்பட்டது. இதனிடையே ரொக்கப் பணம் ரூ.42,300 மற்றும் தூத்துக்குடி காவலா் பயிற்சிப் பள்ளி மூலம் பெறப்பட்ட ரூ.27 ஆயிரம் உதவித்தொகையை உயிரிழந்த காவலா் ராமச்சந்திரன் குடும்பத்திற்கு காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீ அபினவ் வழங்கினாா். நிகழ்வில், மறைந்த ராமச்சந்திரனின் பெற்றோா், மனைவி, குழந்தைகள், சேலம் மாவட்ட 2011 பேட்ச் நண்பா்கள் பங்கேற்றனா்.