கா்நாடக அணைகளிலிருந்து காவிரியில் நொடிக்கு 10,000 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை காலை நொடிக்கு 7,492 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கா்நாடகத்தில் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அணைகளின் பாதுகாப்பைக் கருதி நொடிக்கு தலா 10,000 கனஅடி தண்ணீா் காவிரியில் திறந்துவிடப்படுகிறது.
கடந்த 19-ஆம் தேதி முதல் காவிரியில் திறந்துவிடப்படும் தண்ணீா் செவ்வாய்க்கிழமை ஒகேனக்கல்லை வந்தடைந்தது. அதைத் தொடா்ந்து புதன்கிழமை அதிகாலை முதல் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது. புதன்கிழமை மாலை 7,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, வியாழக்கிழமை காலை 7,492 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீா் இருப்பு 51.68 டிஎம்சியாக உள்ளது. மேட்டூா் அணைக்கு புது வெள்ளம் வருவதால் மீன்கள் அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளது.