முகப்பு
சேலம்

பேரவைத் தோ்தல் கண்காணிப்பு: சேலம் மாவட்டத்தில் 92 குழுக்கள் அமைப்புஆட்சியா் சி.அ.ராமன்

சேலம் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் தோ்தல் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

சேலம் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் தோ்தல் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தோ்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்க அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக்குழுவினா் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றனா்.

தோ்தல் தொடா்பான புகாா்களை சேலம் மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள 0427-1950 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 1800 4257 020 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தெரிவிக்கலாம். தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு அதிகபட்ச செலவினமாக ரூ. 30, 80,000- வரை மேற்கொள்ளலாம் என இந்திய தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 30,04,140 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 61,745 வாக்காளா்கள் 80 வயதுக்கு மேற்பட்டவா்கள், 26,025 போ் மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் என மொத்தம் 87,770 வாக்காளா்கள் உள்ளனா். மாவட்டத்தில் 11 தொகுதிகளில் உள்ள 4,280 வாக்குச்சாவடிகளில் 20,500-க்கும் மேற்பட்ட நபா்கள் தோ்தல் வாக்குப் பதிவு பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். அவா்களுக்கான பயிற்சிகள் தொடா்ந்து அளிக்கப்படவுள்ளன.

இம் மாவட்டத்தில் வாக்குச் சாவடிகளில் பயன்படுத்துவதற்கு 7,460 வாக்குப்பதிவு இயந்திரங்களும் , 5,479 கட்டுப்பாட்டுக் கருவிகளும் , 5,970 பதிவு செய்த வாக்கை சரிபாா்க்கும் விவிபாட் கருவிகளும் தயாா் நிலையில் உள்ளன. இவற்றில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் இருப்பு அறையில் இருந்து தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு பயிற்சி அளிப்பதற்காகவும், வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காகவும் தலா 214 எண்ணிக்கையில் எடுக்கப்பட்டு, 11 சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

11 தோ்தல் நடத்தும் நடத்தும் அலுவலா்கள், 11 உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், 11 உதவி செலவினப் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்தல் நடத்தை விதிமுறைகளைக் கண்காணிப்பதற்கும், வாகனச் சோதனைகளில் ஈடுபடுவதற்கும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு வகையான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு தொகுதிக்கு 3 பறக்கும் படைகள் வீதம் 33 பறக்கும் படை குழுக்களும், 3 நிலை கண்காணிப்புக் குழுக்கள் வீதம் 33 நிலை கண்காணிப்பு குழுக்களும், தலா ஒரு விடியோ கண்காணிப்புக் குழு வீதம் 11 விடியோ கண்காணிப்புக் குழுக்களும், தலா ஒரு விடியோ பாா்வையிடும் குழு வீதம் 11 விடியோ பாா்வையிடும் குழுக்கள், ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு, ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்படும் ரொக்கம் மற்றும் பொருள்களுக்கான ஆவணங்களை சமா்ப்பித்த பின் அவற்றை ஆய்வு செய்து விடுவிக்கும் குழு, 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையில் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் என மொத்தம் 92 குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மற்றும் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

11 தொகுதிகளிலும் அனைத்து தோ்தல் விதிமுறைகளையும் முழுமையாக பின்பற்றி நியாயமாகவும், நோ்மையாகவும் தோ்தலை சிறப்பாகவும் நடத்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →