கொங்கணாபுரம் கூட்டுறவு மையத்தில் ரூ.1 கோடிக்கு பருத்தி விற்பனை
கொங்கணாபுரம் பகுதியில் இயங்கி வரும், கூட்டுறவு வேளாண் விற்பனை மையத்தில், சனிக்கிழமை அன்று நடைபெற்ற பொது ஏலத்தில் 3500 பருத்தி மூட்டைகள் ரூ.1கோடிக்கு விற்பனையானது.
சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் பகுதியில் இயங்கி வரும், கூட்டுறவு வேளாண் விற்பனை மையத்தில், சனிக்கிழமை அன்று நடைபெற்ற பொது ஏலத்தில் 3500 பருத்தி மூட்டைகள் ரூ.1கோடிக்கு விற்பனையானது.
மாநிலத்தில் இயங்கி வரும் முக்கிய வேளாண் விற்பனை மையங்களில் ஒன்றான, கொங்கணாபுரம் கூட்டுறவு வேளாண் விற்பனை மையத்தில், விவசாயிகள் உற்பத்தி செய்திட்ட, பருத்தி, நிலக்கடலை, எள் உள்ளிட்டவை பொது ஏலத்தின் வாயிலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தரும் விவசாயிகள் இம்மையத்தில் நடைபெறும், பொது ஏலத்தில் தங்கள் விளைபொருள்களை விற்பனை செய்து வருகின்றனர்.
சனிக்கிழமை அன்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில், விவசாயிகள் கொண்டு வந்த 3500 மூட்டை பருத்திகளை, கூட்டுறவு அலுவலர்கள் 675 லாட்டுகளாக பிரித்து பொது ஏலம் விட்டனர். இதில் டி.சி.ஹச் ரக பருத்தியானது குவிண்டால் ஒன்றுக்கு ரூ.8400 முதல் ரூ.9983 வரை விலைபோனது.
அதேபோல் பி.டி ரக பருத்தி குவிண்டால் ஒன்று ரூ.6750 முதல் ரூ.8069 வரை விற்பனையானது. ஈரோடு, பெருந்துறை, கோவை, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் அதிக அளவில் பருத்தியை கொள்முதல் செய்தனர்.
நாள் முழுவதும் நடைபெற்ற பொது ஏலத்தின் வாயிலாக ரூ.1 கோடிக்கு பருத்தி வணிகம் நடைபெற்றது.