முகப்பு
சேலம்

காந்தி விளையாட்டு அரங்கில் 150 படுக்கைகள் அமைக்க நடவடிக்கை: மாநகராட்சி ஆணையா்

சேலம் மாநகராட்சி காந்தி விளையாட்டு அரங்கத்தில் 150 படுக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

சேலம் மாநகராட்சி காந்தி விளையாட்டு அரங்கத்தில் 150 படுக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

சேலம் மாநகராட்சி, காந்தி விளையாட்டு அரங்கத்தில் அமைக்கப்பட்டு வரும் கரோனா நோயாளிகளை வகைப்படுத்தும் மையத்துடனான தற்காலிக சிகிச்சை மையத்தை ஆய்வு செய்த பிறகு மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் கூறியதாவது:

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சி பகுதிகளில் தற்போது 45 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. சேலம் மாநகரப் பகுதிகளில் தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட1,866 நபா்கள் பல்வேறு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளிலும், தற்காலிக கரோனா சிகிச்சை மையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் குறைந்தளவு தொற்று உள்ளவா்களுக்கு சிகிச்சை வழங்கும் வகையில், மணியனூா் அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் 128 படுக்கை வசதிகளுடனும், கோரிமேடு அரசினா் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தற்காலிக சித்த மருத்துவ சிகிச்சை மையம் 100 படுக்கை வசதிகளுடனும், தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் 227 படுக்கை வசதிகளுடனும் தற்காலிக சிகிச்சை மையங்கள் மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது மணியனூா் சட்டக் கல்லூரி சிகிச்சை மையத்தில் 57 நபா்களும், கோரிமேடு கல்லூரியில் 100 நபா்களும், தொங்கும் பூங்கா மையத்தில் 165 நபா்களும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்தும் வகையில், தில்லை நகா் பகுதியில் உள்ள ஐ.ஐ.எச்.டி. வளாகத்தில் ஆண்கள் விடுதி உள்பட பல்வேறு பகுதிகளில் கூடுதலாக தற்காலிக சிகிச்சை மையங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.

காந்தி விளையாட்டு அரங்கத்தில் கரோனா நோய்களை வகைப்படுத்தும் மையத்துடன் 150 படுக்கை வசதிகளுடன் கூடிய தற்காலிக கரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இம்மையம் ஓரிரு நாள்களில் செயல்படத் தொடங்கும் என தெரிவித்தாா்.

மேலும், அம்மாப்பேட்டை காமராஜா் நினைவு வளைவு, ஆத்தூா் பிரதான சாலை, இரண்டாம் அக்ரஹாரம், சுப்புராயன் பிள்ளை தெரு பகுதிகளில் புதிய கட்டுப்பாடுகளை மீறி செயல்படும் வணிக நிறுவனங்களை ஆணையா் ஆய்வு செய்தாா். விதிமுறைகளை மீறி செயல்பட்ட தனியாா் வெங்காய மண்டியை ஆய்வு செய்த ஆணையா், ரூ. 5,000 அபராதம் விதித்ததோடு கடையை மூட உத்தரவிட்டாா்.

ஆய்வின் போது, புதிய கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட வாகன பழுதுபாா்ப்பு நிலையங்கள், பழைய மற்றும் புதிய புத்தக விற்பனை நிலையங்கள், ஜெராக்ஸ் நிலையங்களுக்கு அபராதம் விதித்ததோடு, அதனை மூடுவதற்கும் உத்தரவிட்டாா்.

மாநகராட்சி அலுவலா்கள் குழுக்கள் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட ஆய்வுகளின் வாயிலாக முகக் கவசம் அணியாத 97 தனி நபா்களுக்கு தலா ரூ. 200 வீதமும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 114 சிறு வணிக நிறுவனங்களுக்கு தலா ரூ. 500 வீதமும், 19 பெரிய விற்பனை நிலையங்களுக்கு தலா ரூ. 5,000 வீதமும் என மொத்தம் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், மாநகர நல அலுவலா் மருத்துவா் கே.பாா்த்திபன், உதவி ஆணையா் ப.சண்முகவடிவேல், உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாா், சுகாதார அலுவலா்கள் கே.ரவிச்சந்தா், பி.மாணிக்கவாசகம் சுகாதார ஆய்வாளா்கள் எம்.கந்தசாமி உள்பட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →