பதிவு செய்த கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கக் கோரிக்கை
சங்ககிரி வட்டத்தில் உள்ள பல்வேறு அமைப்புச்சாரா தொழிலாளர்கள் மற்றும் கட்டுமானத்தொழிலாளர்கள் பல்வேறு நலத்திட்டங்களுக்காக தொழிலாளர் துறையின்
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்தில் உள்ள பல்வேறு அமைப்புச்சாரா தொழிலாளர்கள் மற்றும் கட்டுமானத்தொழிலாளர்கள் பல்வேறு நலத்திட்டங்களுக்காக தொழிலாளர் துறையின் இணையதள வழியாக பதிவு செய்துள்ளவர்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக அடையாள அட்டை கிடைக்கப்பெறாததால் அரசின் நலத்திட்டங்களை பெற இயலவில்லை என தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது தமிழ அரசு கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையாக முழு பொதுமுடக்கம் அறிவித்துள்ளதையடுத்து அரசின் நிவாரணத்தொகை பெற அரசின் இணையதள வழியாக பதிவு செய்துள்ளவர்களுக்கு அடையாள அட்டை வழங்க தமிழகரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வியாழக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக தொழிலாளர் துறையின் சார்பில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள், சமூக பாதுகாப்பு நல வாரியம், அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் நல வாரியம், சலவைத் தொழிலாளர்கள் நல வாரியம், முடிதிருத்துவோர், தையல் தொழிலாளர்கள், கைவினை தொழிலாளர்கள், பனைமரத்தொழிலாளர்கள், கைத்தறி மற்றும் கைத்தறிப்பட்டு நெய்யும் தொழிலாளர்கள், காலணி, தோல் பொருள்கள் உற்பத்தி மற்றும் தோல் பதனிடும் தொழிலளாகள், ஓவியர் நல வாரியம், பொற்கொல்லர், மண்பாண்டத்தொழிலாளர்கள், வீட்டுப்பணியாளர்கள், விசைத்தறி நெசவாளர்கள், பாதையோர வணிகர்கள், கடைகள், மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், சமையல் தொழிலாளர்கள் உள்ளிட்ட 17 நல வாரியங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் பதிவு செய்து வந்தனர்.
கடந்த வருடம் கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையையொட்டி தமிழக அரசு முழு பொதுமுடக்கம் அறிவித்திருந்ததையடுத்து தொழிலாளர் துறை உதவி ஆணையாளர் அலுவலகங்களுக்கு நேரடியாகச் செல்வதில் சிரமம் ஏற்பட்டு வந்ததையடுத்து 2020ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி முதல் தொழிலாளர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே தொழிலாளர் துறை நலவாரியங்களில் இணையதளம் வழியாக பதிவு செய்து கொள்ளலாம் என அறிவித்திருந்தது. அதனையடுத்து சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி, எடப்பாடி, சேலம், ஓமலூர் உள்ளிட்ட பல்வேறு வட்டங்களில் உள்ள பல்வேறு அமைப்புச்சார தொழிலாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளனர். அரசு அடையாள அட்டை வைத்துள்ளவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகின்றது. கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையையொட்டி அரசு முழு பொது முடக்கம் அறிவித்துள்ளது. பொதுமுடக்கம் காலத்தில் தொழிலாளர்கள் அவர்களது குடும்பத்திற்கு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் கிடைக்க தொழிலாளர் துறை இணையதளம் வழியாக பதிவு செய்தவர்களுக்கு அடையாள அட்டை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் ஆர்.ராகவன் கூறியதாவது:- தமிழக அரசு கடந்த 2020ம் ஜூன் மாதம் முதல் கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையையொட்டி முழு பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டிருந்த போது அமைப்புச்சாரா தொழிலாளர்கள், தொழிலாளர் துறை இணையதளம் வழியாக உறுப்பினராக பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்திருந்தது. அதனையடுத்து சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி, எடப்பாடி, ஓமலூர், மேட்டூர் உள்ளிட்ட பல்வேறு வட்டப்பகுதிகளில் உள்ள அமைப்புச்சார தொழிலாளர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் இணையதளம் வழியாக பதிவு செய்துள்ளனர். பதிவு செய்துள்ளவர்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக அடையாள அட்டை வழங்கப்படவில்லை. தற்போது கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையாக அரசு முழு பொதுமுடக்கத்தை அமுல்படுத்தியுள்ளது. அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்டங்களைப் பெற தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை தேவைப்படுகின்றன. எனவே தமிழக முதல்வர் சிறப்பு கவனம் செலுத்தி இணையதளம் வழியாக பதிவு செய்துள்ள அமைப்புச்சார தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்றார்.