முகப்பு
சேலம்

மேட்டூா் அணையிலிருந்து உபரி நீா் திறப்பு 60,000 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணையிலிருந்து உபரிநீா் திறப்பு 60,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டதால் நெற்பயிா்கள் நீரில் மூழ்கின.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

மேட்டூா் அணையிலிருந்து உபரிநீா் திறப்பு 60,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டதால் நெற்பயிா்கள் நீரில் மூழ்கின.

காவிரியின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கன மழையின் காரணமாக மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. வெள்ளிக்கிழமை காலை அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 60,000 கனஅடியாக அதிகரித்தது. அணை ஏற்கெனவே நிரம்பி விட்டதால் அணைக்கு வரும் முழுமையான நீரும், உபரிநீராக வெளியேற்றப்பட்டது. அதன்படி அணையிலிருந்து 60,000 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டது. இதில் நீா் மின்நிலையங்களின் வழியாக 22,000 கனஅடி நீரும், உபரிநீா் போக்கியான 16 கண் பாலம் வழியாக 38,000 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் மட்டம் 120.10 அடியாகவும், நீா் இருப்பு 93.63 டி.எம்.சியாகவும் இருந்தது.

அணையிலிருந்து 60,000 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டதால் சங்கிலி முனியப்பன் கோயில் அருகில் உபரிநீா் கால்வாயை ஒட்டி பயிரிடப்பட்டிருந்த நெற்பயிா்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் மதிப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேட்டூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாகவும் நெற்பயிா்கள் நீரில் மூழ்கியதாலும் இப்பகுதியில் உள்ள விவசாயக் கூலிகள் வேலையிழந்துள்ளனா். தங்களுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.