சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இரு சக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்த மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்கில் ரூ.1 கோடிக்கு சமரச தீர்வு காணப்பட்டன.
சேலம் மாவட்டம், சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்களில் உள்ள நான்கு நீதிமன்றங்களில் உள்ள 400க்கும் மேற்பட்ட வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதையும் படிக்க | மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 12,000 கன அடி நீர் திறப்பு
அதில் முதற்கட்டமாக இரு சக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்த மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்கில் ரூ.1 கோடிக்கு சமரச தீர்வு காணப்பட்டன.
சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சார்பு, மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்கள், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்.1, எண்.2 ஆகிய நான்கு நீதிமன்றங்களில் உள்ள மோட்டார் வாகன விபத்து, சிவில் வழக்குகள், நிறைவேற்று மனுக்கள், வாரிசு உரிமை சான்றிதழ், வாடகை ஒப்பந்தம், குடும்ப நல வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கியில் உள்ள நிலுவை கடன்கள் உள்ளிட்ட 400 க்கும் மேற்பட்ட வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. சங்ககிரி வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவரும் சார்பு நீதிபதியுமான எஸ்.உமா மகேஸ்வரி தலைமை வகித்து மக்கள் நீதிமன்ற பணிகளை தொடக்கி வைத்தார்.
இதையும் படிக்க | திருவள்ளூரில் விநாயகர் சிலை கரைத்த போது சோகம்: கால்வாயில் தவறி விழுந்து 2 சிறுவர்கள் பலி
மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஆர்.இராதாகிருஷ்ணன், முதலாவது குற்றவியல் நீதிமன்ற நடுவர் டி.சுந்தர்ராஜன், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி வி.சம்பத்குமார் ஆகிய நீதிபதிகள் அடங்கிய மூன்று தனி அமர்வுகளில் வழக்குகள் சமரசம் செய்து வைக்கப்பட்டன.
இம்மக்கள் நீதிமன்றத்தில் சென்னை தனியார் நிறுவனத்தில் துணை மேலாளராக பணிபுரிந்து வந்த முகுந்தன் என்பவர் கடந்த 2017ம் வருடம் நவம்பர் 9ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், ஓரகடம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது தனியார் பேருந்து மோதி பலத்த காயமடைந்தார்.
காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து உயிரிழந்தவரின் மனைவி மோகனா, இவரது குழந்தை ஜெய்னிகிட், அவரது பெற்றோர்கள் பொன்மலர், முருகன் ஆகியோர் ரூ.2 கோடி இழப்பீட்டு கோரி கடந்த 2018ம் வருடம் சங்ககிரி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கு சார்பு நீதிபதி எஸ்.உமாமகேஸ்வரி, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி வி.சம்பத்குமார் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதில் வழக்கு தாக்கல் செய்தவர்கள், அவரது வழக்கறிஞர், சென்னை பஜாஜ் அலையன்ஸ் காப்பீட்டு நிறுவன அலுவலர்கள் முத்துக்குமரன், மேகநாதன், வழக்குரைஞர் ஆர்.கே.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க | காஞ்சிபுரத்தில் பட்டு உற்பத்திப் பூங்கா: அமைச்சர் ஆர்.காந்தி
அதில் காப்பீட்டு நிறுவனத்தின் சார்பில் ரூ.1 கோடி வழங்குவதாக சமரசம் ஏற்பட்டதையடுத்து ரூ.1 கோடிக்கான விபத்து இழப்பீட்டு தொகைக்கான உத்தரவினை வழக்கின் மனுதாரர்களிடம் நீதிபதிகள் வழங்கினர்.
தொடர்ந்து மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரணை நடைபெற்று வருகின்றன. கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைகளையொட்டி பாதுகாப்பு கருதி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு சமரச வழக்கிற்காக வந்தவர்கள் காய்ச்சல் வெப்பமானியைக் கொண்டு பரிசோதனை செய்யப்பட்டும், முகக்கவசம் அணிந்தும் அனுமதிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.