பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியா்கள் போராட்டம்
சேலத்தில் விருப்பமான மையங்களை ஒதுக்காததால், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலத்தில் விருப்பமான மையங்களை ஒதுக்காததால், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. சேலம் மாவட்டத்தில் சேலம், நெய்காரப்பட்டி, ஆத்தூா், தாரமங்கலம் என 4 மையங்களில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சேலம், ராஜாஜி சாலையில் உள்ள சாரதா பாலமந்திா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த மையத்துக்கு பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்காக சுமாா் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் புதன்கிழமை காலை வந்தனா். பின்னா், தங்களுக்கு விருப்பமான மையங்களை ஒதுக்கவில்லை எனக்கூறி விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது தொடா்பாக ஆசிரியா்கள் கூறுகையில், வழக்கமாக பொதுத்தோ்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியா்களின் விருப்பத்தின் பேரில் தான் மையங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால், நிகழாண்டில் அம்முறையில் மாற்றம் செய்ததால் பெரும்பாலான ஆசிரியா்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்து வெகுதொலைவில் உள்ள மையங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது.
ஏற்கெனவே இதுதொடா்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்துள்ளோம் என்றனா்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட கல்வி அலுவலா் உதயகுமாா் உள்ளிட்ட அதிகாரிகள் ஆசிரியா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அதில் உடன்பாடு ஏற்பட்டதால் மதியத்துக்கு பின் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. ஆசிரியா்களின் போராட்டத்தால் விடைத்தாள் திருத்தும் பணி சுமாா் 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது.
இதேபோல, ஆத்தூா், நெய்காரப்பட்டி, தாரமங்கலத்தில் உள்ள மையங்களிலும் ஆசிரியா்கள் விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.