எடப்பாடி: தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில், மாநிலம் முழுதும் திமுகவினர் பல்வேறு இடங்களில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக எடப்பாடி பேருந்து நிலைய வளாகத்தில் நகர திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகரமன்ற தலைவர் டி.எம். எஸ் பாஷா தலைமையிலான திரளான திமுக நிர்வாகிகள், திமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்ட, மகளிருக்கான அரசு பேருந்து இலவச பயணம், தமிழகத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின் இணைப்பு, மாணவிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்கள் குறித்த பதாகைகளை ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர்.
இதைத் தொடர்ந்து அவர்கள் எடப்பாடி பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நகரமன்ற தலைவர் டி.எம். எஸ் பாஷா கூறுகையில்:
திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடையும் நிலையில், எடப்பாடி நகரப் பகுதியின் வளர்ச்சிக்காக ரூ.2 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின் விளக்குகள் அமைத்திடவும், நகரின் மக்கள் தொகை பெருக்கத்தை கருத்தில் கொண்டு புதிய குடிநீர் திட்டத்திற்க்கான பணிகள் மேற்கொள்ளவும், நகரின் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பாதாள சாக்கடை அமைத்திடவும் அனுமதி அளித்துள்ள தமிழக முதல்வருக்கும், சம்பந்தப்பட்ட துறை சார் அமைச்சர் பெருமக்களுக்கும் எடப்பாடி நகரப் பகுதி பொதுமக்கள் சார்பாக நன்றிகளை தெரிவிப்பதாக கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் திரளான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.