முகப்பு
சேலம்

தக்காளி திருடிய இளைஞர் சிறையிலடைப்பு

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே பெருமாகவுண்டம்பட்டி பகுதியில் தக்காளி பெட்டியை இருசக்கர வாகனத்தில் திருடிச் சென்ற இளைஞரை மகுடஞ்சாவடி காவல் துறையினர் கைது செய்தனர்.

Updated On : 29 மே, 2022 at 10:28 AM
பகிர்:


சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே பெருமாகவுண்டம்பட்டி பகுதியில் தக்காளி பெட்டியை இருசக்கர வாகனத்தில் திருடிச் சென்ற இளைஞரை மகுடஞ்சாவடி காவல் துறையினர் கைது செய்தனர்.

இளம்பிள்ளையை அடுத்த பெருமாகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர் அதே பகுதியில் காய்கறி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு தக்காளி பார்சல் இறக்குபவர், கடந்த வியாழக்கிழமை 60 கிலோ எடையுள்ள 2 கிரேடு தக்காளி பெட்டியை இறக்கி வைத்துள்ளார்.

இந்நிலையில் கடை உரிமையாளர் சங்கர் கடையைத் திறப்பதற்காக வந்து பார்த்தபோது கடையின் முன்பு ஒரு  கிரேடு தக்காளி பெட்டி மட்டுமே இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் தக்காளி இறக்கியவரிடம் கேட்டபோது அவர் இரண்டு பெட்டி இறக்கி வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

Advertisement

இதனையடுத்து கடையில் வைக்கப்பட்டிருந்த இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமிராவை பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் தக்காளி பெட்டியை திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து சங்கர் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தக்காளி பெட்டியை திருடிச் சென்ற மர்ம நபரின் இருசக்கர வாகனத்தின் நம்பரை வைத்து விசாரணை செய்ததில் அவர் வெண்ணந்தூர் தங்கசாலை பகுதியை சேர்ந்த (32) சின்ராஜ் என்பதும் இவர் ஏற்கெனவே சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் ஆப்பிள் பெட்டி திருடிய வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்ததும் தெரியவந்தது.

இதன்பிறகு, அவரைக் கைது செய்த மகுடஞ்சாவடி காவல் துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.