முகப்பு
சேலம்

அரசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 20 பேர் படுகாயம்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சென்னையில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற அரசு விரைவுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:20 AM
சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்த அரசுப் பேருந்து
பகிர்:


சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சென்னையில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற அரசு விரைவுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சென்னை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக சொகுசுப் பேருந்து, நேற்று (சனிக்கிழமை) இரவு, சென்னையிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு, வாழப்பாடி வழியாக திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணியளவில் சேலம்-சென்னை புறவழிச் சாலையில், வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் அருகே பேருந்து சென்றபோது, எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட ஓட்டுநர்  முயற்சித்தபோது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, நிலைதடுமாறி சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் கள்ளக்குறிச்சி பாண்டலம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (43),  நடத்துனர் செல்வராஜ் (45) உள்பட 20 பேர் படுகாயமடைந்தனர். மற்ற 22 பேர் லேசான காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி காவல் ஆய்வாளர் உமாசங்கர் தலைமையிலான காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று, பொதுமக்கள் உதவியுடன் விபத்துக்குள்ளான பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து, பேருந்துக்குள் சிக்கித் தவித்த பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாழப்பாடி மற்றும் சேலம் அரசு,  தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால், வாழப்பாடியில் சேலம்-சென்னை புறவழிச் சாலையில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வாழப்பாடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.