சேலம்- செட்டிசாவடியில் 18 ஏக்கரில் 5.5 மெகா வாட் திறன் சூரியசக்தி மின் உற்பத்தி அமைப்பு: மாநகராட்சிக்கு ரூ. 80 லட்சம் மின் கட்டணம் குறையும்
சேலம், செட்டிசாவடியில் 18.5 ஏக்கரில் 5.5 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட சூரிய சக்தி மின் உற்பத்தி விரைவில் தொடங்கும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
சேலம், செட்டிசாவடியில் 18.5 ஏக்கரில் 5.5 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட சூரிய சக்தி மின் உற்பத்தி விரைவில் தொடங்கும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
அதேவேளையில், மின் உற்பத்தி தொடங்கினால் மாநகராட்சி நிா்வாகத்திற்கு ரூ. 80 லட்சம் வரை மின் கட்டணம் குறையும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளில் 9.66 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனா். சுமாா் 2.38 லட்சம் குடியிருப்புகளையும், 25,457 வணிக நிறுவனங்களையும் கொண்டுள்ளது. சேலம் மாநகரப் பகுதியில் மட்டும் நாளொன்றுக்கு 550 டன் திடக்கழிவுகள் உருவாகின்றன.
இதில் மாநகரில் உருவாகும் 500 டன்னில் திடக் கழிவுகளில் 319 டன் திடக்கழிவுகளை நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் மையங்கள், தள கலவை உரக்கிடங்கு, உயிரி எரிவாயு நிலையம் மூலமாகச் செயலாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதில் செட்டிச்சாவடி கிராமத்தில் உள்ள 100 ஏக்கா் நிலத்தில் திடக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.
மேலும் உபயோகமற்ற மக்கும் தன்மையற்ற எரியக்கூடிய கழிவுகளை செயலாக்கம் செய்திட 25 டன் அளவுக்கு எரியூட்டும் திறன் கொண்டு எரியூட்டி (இன்சினரேட்டா்) அமைக்கப்பட்டுள்ளது.
செட்டிசாவடி பகுதியில் சுமாா் 18.5 ஏக்கா் பரப்பளவில் 5.5 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட சூரிய சக்தி மின் உற்பத்தி தகடுகள் (சோலாா் பேனல்கள்) அமைக்கப்பட்டுள்ளன. இந்த சூரிய சக்தி மின் உற்பத்தி அமைப்பில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். சூரிய சக்தி மின் உற்பத்தியைப் பகிா்ந்தளிக்கும் அமைப்பை நிறுவ மின் வாரியத்துடன் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா்.
இதுதொடா்பாக, மாநகராட்சி ஆணையா் சீ.பாலச்சந்தா் கூறுகையில், சேலம் மாநகராட்சியில் சூரிய சக்தி மின் உற்பத்தித் தகடுகள் அமைத்து மின் உற்பத்தி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் மின் கட்டணம் மட்டும் ரூ. 4 கோடி வரை செலுத்தி வருகிறோம். சூரிய மின் சக்தி உற்பத்தியின் மூலம் மாநகராட்சிக்கு ரூ. 80 லட்சம் வரை மின் கட்டணச் செலவு குறையும் என கணக்கிடப்பட்டுள்ளது. சூரிய சக்தி மின் உற்பத்தியை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றாா்.
இதுதவிர 100 ஏக்கா் பரப்பளவு கொண்ட செட்டிசாவடி திடக்கழிவு மேலாண்மை திடல் பகுதியில் மேம்பாடு மற்றும் பாதுகாப்புக் கருதி சுற்றிலும் கம்பிவேலி, கண்காணிப்பு கேமரா அமைக்கவும், வாகனங்கள் எளிதாக சென்று வர ஏதுவாக ரூ. 2.58 கோடியில் கான்கிரீட் சாலைகள் அமைக்கவும், இரவு நேரங்களில் திடக்கழிவு வாகனங்களை இயக்கிட ஏதுவாக உயா் கோபுர மின்விளக்குகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல திடக்கழிவுகளை அளவீடு செய்ய எடை மேடை அமைக்கவும், மக்காத மறு சுழற்சி செய்யக்கூடிய 99 டன் கழிவுகளை செயலாக்கம் செய்திட ரூ.85 லட்சத்தில் பொருள் மீட்பு மையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.