ஒரு சொட்டு மதுவில்லாத தமிழகம்... தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ராமதாஸ்!
பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டது குறித்து...
எதிர்வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் அன்புமணி தலைமையிலான பாமக, அதிமுக கூட்டணியில் இணைந்துவிட்ட நிலையில், ராமதாஸ் தலைமையிலான அணி திமுக தலைமையிலான கூட்டணியில் இணையும் என எதிர்பாா்க்கப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.
இந்த நிலையில், கடந்த 10-ஆம் தேதி தைலாபுரத்துக்கு வந்த சசிகலா, மரியாதை நிமித்தமாக மருத்துவர் ராமதாஸை சந்தித்துப் பேசினார். தொடர்ந்து 13-ஆம் தேதி அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற தனது கட்சியின் பெயரையும் அவர் அறிவித்தார்.
இதையடுத்து, அந்தக் கட்சியின் பொதுச் செயலர் சசிகலா மீண்டும் தைலாபுரம் தோட்டத்துக்கு வந்து, பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்துப் பேசினார்.
அப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, சட்டப்பேரவைத் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுவெதென முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் பாமக நிறுவனர் ராமதாஸும், அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலர் வி.கே.சசிகலாவும் கையொப்பமிட்டு, அதை பரிமாறிக் கொண்டனர்.
இந்தக் கூட்டணியுடன் இன்னும் சிலர் இணையவுள்ளதாகவும் 234 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளதாகவும் ராமதாஸ் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 101 பக்கங்களைக் கொண்ட தேர்தல் அறிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார்.
அனைவருக்கும் தரமான, சுமையில்லாத, கட்டாய, கட்டனமில்லாத கல்வித் திட்டம், ஒரு சொட்டு மதுவில்லாத தமிழகட்தை உருவாக்குவது, மருத்துவ வசதியை மேம்படுத்துவது உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.