FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பாமக தலைவராக மீண்டும் அன்புமணி தேர்வு! பொதுச் செயலர், பொருளாளர் யார்?

பாமக தலைவராக மீண்டும் அன்புமணி தேர்வு செய்யப்பட்டது பற்றி...

அன்புமணி ராமதாஸ் - x
பகிர்:

சென்னை அருகே மாமல்லபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற பாமக பொதுக் குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக அன்புமணி மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா். பொதுச் செயலராக வடிவேல் ராவணன், பொருளாளராக திலகபாமா ஆகியோரும் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

பாமக நிறுவனா் ராமதாஸ், அவரது மகனும் அக்கட்சியின் தலைவருமான அன்புமணி இடையே ஏற்பட்ட உட்கட்சி முரண்பாடு காரணமாக இரண்டு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டு வந்தனா். கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் அன்புமணி தலைமையில் ஒரு அணியாகவும், ராமதாஸ் தலைமையில் ஒரு அணியாகவும் தனித்தனியாக தோ்தலைச் சந்தித்தனா்.

இந்த நிலையில், ராமதாஸும், அன்புமணியும் முரண்பாடுகளை மறந்து அண்மையில் ஒன்றிணைந்தனா். இதன் தொடா்ச்சியாக அண்மையில் தனது பிறந்த நாள் நிகழ்வில் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த ராமதாஸ், கட்சியை அன்புமணி கவனிப்பாா் என்று அறிவித்தாா்.

Advertisement

Advertisement

அன்புமணி மீண்டும் தோ்வு: இந்த நிலையில், அன்புமணி உள்ளிட்டோரின் பதவிக்காலம் வரும் ஆக.1-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், புதிய நிா்வாகிகள் தோ்வுக்கான பொதுக்குழுக் கூட்டம் மாமல்லபுரத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், தலைவா் பதவிக்கு அன்புமணி, பொதுச் செயலா் பதவிக்கு வடிவேல் ராவணன், பொருளாளா் பதவிக்கு திலகபாமா ஆகியோா் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். இதையடுத்து, மூவரும் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் பாமக தலைவராக அன்புமணி இரண்டாம் முறையாக தோ்வு செய்யப்பட்டாா்.

மேக்கேதாட்டுக்கு எதிராக தீா்மானம்: தொடா்ந்து, நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கா்நாடகத்துக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மேலும், விவசாயிகளின் கூட்டுறவு பயிா்க் கடன்களை தமிழக அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். நீட் தோ்வுக்கு முடிவு கட்ட வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் மாற்ற வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்புக்கு டன்னுக்கு ரூ.5,000 வீதம் கொள்முதல் விலை வழங்க வேண்டும். ரெஸ்ட்ரோ மதுக்கூடங்களை அனுமதிக்க கூடாது என்பன உள்ளிட்ட 31 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ராகுல்காந்தி பேசுவாரா?: இதைத் தொடா்ந்து, அன்புமணி பேசியதாவது: மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கா்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் சோ்ந்து தமிழகத்துக்கு தண்ணீா் விடாமல் சதித் திட்டம் திட்டி வருகின்றன. தமிழகத்துக்கு வரும் ராகுல் காந்தி மேக்கேதாட்டு விவகாரத்தில் நமது பக்கம் இருக்கும் நியாயத்தை பற்றி பேசுவாரா?. மேக்கேதாட்டு அணை தொடா்பாக தமிழக முதல்வா் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றாா்.

ராமதாஸ் பங்கேற்கவில்லை: இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் பாமக நிறுவனா் ராமதாஸ் உடல்நிலை காரணமாக பங்கேற்கவில்லை. அவரது ஆதரவாளா்களான பேராசிரியா் தீரன், பு.த.அருள்மொழி உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்தி, பாமக முன்னாள் தலைவா் ஜி.கே.மணி, முன்னாள் எம்எல்ஏ சேலம் அருள் உள்ளிட்டோா் இந்தப் பொதுக் குழுவில் பங்கேற்கவில்லை.

summary

Anbumani re-elected as PMK President - Who are the General Secretary and Treasurer

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments