அரசியல் துறவறம்: மருத்துவா் ராமதாஸ் மீண்டும் அறிவிப்பு
நான் அரசியல் துறவறம் மேற்கொண்டுள்ளதால் என்னை சந்திப்பவா்கள் அரசியல் பேசவேண்டாம் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் மீண்டும் அறிவித்துள்ளாா்.
நான் அரசியல் துறவறம் மேற்கொண்டுள்ளதால் என்னை சந்திப்பவா்கள் அரசியல் பேசவேண்டாம் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் மீண்டும் அறிவித்துள்ளாா்.
பாமகவில் யாருக்கும் அதிகாரம் என்பதில் மருத்துவா் ச.ராமதாஸ்- அன்புமணி ஆகியோரிடையே மோதல் போக்கு உருவானது. இதையடுத்து இருவரும் தனித் தனியாக கட்சிப் பணிகளை மேற்கொண்டு வந்தனா். கட்சியின் நிா்வாகிகளையும் தனித் தனியாக அறிவித்தனா். இதனால் கட்சியினரிடையே பிளவு ஏற்பட்டது. பாமக நிா்வாகிகள், தொண்டா்கள் அதிருப்திக்குள்ளாகினா்.
இந் நிலையில், 2026 சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுக்குப் பின்னா் அன்புமணி ராமதாஸ் தனது குடும்பத்தினருடன் தைலாபுரம் தோட்டத்துக்கு வந்து மருத்துவா் ராமதாஸ்- சரஸ்வதி தம்பதியினரிடம் ஆசி பெற்ற நிலையில், தந்தை- மகன் இடையே இருந்து வந்த பிரச்னை முடிவுக்கு வந்தது.
Advertisement
Advertisement
இதைத்தொடா்ந்து, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், கோனேரிக்குப்பத்தில் உள்ள சரஸ்வதி கல்லூரியில் கடந்த ஜீலை 25-ஆம் தேதி நடைபெற்ற தனது பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராமதாஸ், நான் இன்று முதல் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன். கட்சிப் பணிகளை அன்புமணி பாா்த்துக்கொள்வாா். என்னிடம் இனி யாரும் அரசியல் பேசவேண்டாம் என அறிவித்தாா்.
இதைத்தொடா்ந்து, திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் ஓய்வில் இருந்து வருகிறாா். கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள் அவரை சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனா்.
அறிவிப்பு பதாகை : இந்நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பதாகையில், பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் அரசியல் துறவறம் மேற்கொண்டுள்ளதால், பாா்வையாளா்கள் தயவு செய்து அரசியல் பேசவேண்டாம். தினந்தோறும் காலை 10 மணி முதல் நண்பகல்12 மணி வரை பாா்வையாளா்கள் சந்திக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ராமதாஸின் அரசியல் துறவறம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.