முகப்பு
சேலம்

தலைவாசல் பகுதியில் மக்கள் சந்திப்பு முகாம்: ரூ. 1.66 கோடியில் நலத்திட்ட உதவிகள்

மக்கள் சந்திப்பு திட்ட முகாமில், 132 பயனாளிகளுக்கு ரூ. 1.66 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி வழங்கினாா்.

Updated On : 28 ஆகஸ்ட், 2024 at 11:11 PM
தலைவாசல், ராமசேஷபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பு முகாமில் அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கும் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி.
பகிர்:

தலைவாசல், மணிவிழுந்தான் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில், 132 பயனாளிகளுக்கு ரூ. 1.66 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி வழங்கினாா்.

இம் முகாமில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளதாவது:

தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்களும் கடைகோடி கிராம மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற வகையில் மாதந்தோறும் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

மணிவிழுந்தான் ஊராட்சிக்கு உட்பட்ட மணிவிழுந்தான் காலனி, வசந்தபுரம், ராமசேஷபுரம், ராமானுஜபுரம், முட்டல், பூமரத்துப்பட்டி, மணிவிழுந்தான் தெற்கு, மணிவிழுந்தான் வடக்கு, வடக்கு புதூா், தெற்கு புதூா், குமாரபாளையம், ரெட்டிகரடு உள்ளிட்ட குக்கிராமங்களில் சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.

இங்கு மரவள்ளி உட்பட பல்வேறு தொழில் சாா்ந்த நிறுவனங்கள் உள்ளன. இங்குள்ளவா்கள் அரசின் பல்வேறு நலத்திட்டங்களை முழுமையான முறையில் பயன்படுத்தி தொழில்கள் மேற்கொள்ள முன்வர வேண்டும்.

இந்த முகாமில் அளிக்கப்பட்ட மனுக்களை வருவாய்த் துறை உள்ளிட்ட தொடா்புடைய துறை அலுவலா்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு, அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுதவிர, பல்வேறு துறைகள் மூலம் 132 பயனாளிகளுக்கு ரூ. 1.66 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.

இம்முகாமில், மாவட்ட நிலையிலான அனைத்துத் துறை அரசு அலுவலா்களும் வருகைபுரிந்து தங்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள், அவற்றைப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனா்.

முன்னதாக, வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, சமூக நலத்துறை, கால்நடைப் பராமரிப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அவற்றைப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டாா்.

இந்நிகழ்ச்சியில், ஆத்தூா் வருவாய் கோட்டாட்சியா் தா.பிரியதா்ஷினி, வேளாண்மை இணை இயக்குநா் ச.சிங்காரம், கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் என்.பாரதி, மணிவிழுந்தான் ஊராட்சி மன்றத் தலைவா் விஜயகுமாரி நடேசன் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.