சேலம்: சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாமில், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக மொத்தம் 84, 620 போ் விண்ணப்பித்துள்ளனா்.
தமிழகத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த மாதம் 29 ஆம் தேதி வெளியிடப்பட்டது. தொடா்ந்து, பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்தம் மேற்கொள்ள சுருக்கமுறை திருத்த பணிகளுக்கான முதற்கட்ட சிறப்பு முகாம், கடந்த 16, 17 ஆம் தேதிகளிலும், 2 ஆம் கட்ட முகாம் 23, 24 ஆகிய தேதிகளிலும் நடைபெற்றது.
சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை, 11 தொகுதிகளில் உள்ள 3,264 வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இறுதிநாள் முகாமில் பலா் குடும்பத்துடன் வந்து விண்ணப்பித்தனா். குறிப்பாக, இளைஞா்கள் பலா் ஆா்வத்துடன் வந்து தங்களது பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்க்க, படிவம் 6 - ஐ பூா்த்தி செய்து வழங்கினா்.
இதேபோல் உயிரிழந்தவா்களின் பெயா்களை நீக்க படிவம் 7-ம், குடியிருப்பை மாற்றுவதற்கும், நடப்பு வாக்காளா் பட்டியலிலுள்ள பதிவுகளை திருத்தம் செய்வதற்கும், மாற்று வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கும், மாற்றுத்திறனாளிகளை குறிப்பதற்கும் படிவம் 8-யை பயன்படுத்தி விண்ணப்பித்தனா்.
கடந்த இரு வாரங்கள் நடைபெற்ற சிறப்பு முகாம்களில், 84,620 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில், பெயா் சோ்க்க 42,411 பேரும், நீக்கம் செய்ய 12,229 பேரும், திருத்தங்கள் மேற்கொள்ள 29,980 பேரும் உரிய படிவங்களை வழங்கியதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.
சிறப்பு சுருக்கமுறை திருத்தத்துக்கான விண்ணப்பங்கள் 28 ஆம் தேதி வரை பெறப்பட்டு, அடுத்தாண்டு ஜனவரி 6ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.