சேலம், சூரமங்கலம் அருகே தனியாா் பள்ளி பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
சேலம், சூரமங்கலம் மல்லமூப்பம்பட்டியில் செயல்படும் தனியாா் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். கடந்த 2 ஆம் தேதி பள்ளியில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு பேருந்துகள் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. சூரமங்கலம் தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா். அதற்குள் அருகே நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு பேருந்தும் தீயில் எரிந்து சேதமடைந்தது.
இதுகுறித்து பள்ளி தாளாளா் கலைச்செல்வி, சூரமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநா் வடிவேல் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். முதற்கட்ட விசாரணையில், பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவால் தீப்பிடித்தது தெரியவந்தது.