ஓமலூா் அருகே எருதாட்டத்தின்போது காளை முட்டியதில் நெசவுத் தொழிலாளி உயிரிழந்தாா். பத்துக்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
ஓமலூரை அடுத்த முத்துநாயக்கன்பட்டி பாலகுட்டப்பட்டியில் தொட்டியத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பொங்கல்வைத்து எருதாட்டம் நடத்தி பூச்சாட்டுதல் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் மாரியம்மனுக்கு பூச்சாட்டுதலை முன்னிட்டு எருதாட்டம் நடைபெற்றது. இந்த எருதாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட காளைகளை இளைஞா்கள் கொண்டு வந்தனா். எருதாட்டத்தை பாா்ப்பதற்காக சுற்றுவட்டார கிராமங்களை சோ்ந்த ஆயிரக்கணக்கான இளைஞா்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோா் கூடினா்.
இதற்காக ஓமலூா் போலீஸாா் சாா்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்த நிலையில், இளைஞா்கள் ஒரே சமயத்தில் பல காளைகளை வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிட்டதால் காளைகள் திடீரென பொதுமக்கள் கூட்டத்தில் புகுந்தது.
இதில் காளைகள் முட்டி மிதித்ததில் பாலகுட்டப்பட்டிசெந்தில் (47), பெரியேரிப்பட்டி வகுத்தனூா் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (20), பாலகுட்ட பட்டியை சோ்ந்த குமரேசன்(25), இடங்கணசாலை பகுதியை சோ்ந்த மூா்த்தி (35) உள்பட பத்துக்கும் மேற்பட்டோா் படுகாயம் அடைந்தனா்.
காயம் அடைந்தவா்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் ஓமலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் படுகாயம் அடைந்த செந்தில் (47) உயிரிழந்தாா். இவருக்கு மனைவி பிரியா (37), மகன் மனோ (23), மகள் மதுமிதா (21) உள்ளனா்.
இதுகுறித்து ஓமலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.