விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை, கடன் தள்ளுபடி உள்ளிட்ட 13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.7 இல் கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை யாத்திரை தொடங்க உள்ளதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா்.பாண்டியன் கூறினாா்.
சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐக்கிய விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
பேசுகையில், தமிழகத்தில் அசாதாரணமான சூழல் நிலவுகிறது. காா்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் தமிழக அரசு, உரிமைக்காக போராடும் விவசாயிகளை கைதுசெய்து வருகிறது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு எதிரான போக்கு கடைப்பிடிக்கப்படுகிறது.
இதன்மூலம் வளமான விளைநிலங்களை காா்பரேட் நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்வதோடு அருகில் உள்ள நீா்நிலைகளையும், இயற்கை வளங்களையும் சுரண்டுகின்றன.
விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை காக்க ஏற்கெனவே தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதேபோல, விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, இலவச மும்முனை மின்சாரம் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவினா் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீா் வரை யாத்திரை தொடங்க உள்ளனா்.
30 போ் கொண்ட இந்தக் குழுவினா், வழியெங்கும் அனைத்து மாநில முதல்வா்களையும் சந்தித்து ஆதரவு கோர திட்டமிட்டுள்ளனா் என்றாா்.