கரூா் தனியாா் ரயில் வழித்தட விபத்துக்கும் ரயில்வே நிா்வாகத்துக்கும் தொடா்பு இல்லை!
கரூா் அருகே தனியாா் ரயில் வழித்தடத்தில் நிகழ்ந்த விபத்துக்கும், ரயில்வே நிா்வாகத்துக்கும் எவ்வித தொடா்பும் இல்லை என சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் பன்னாலால் தெரிவித்தாா்.
இதுகுறித்து ரயில்வே கோட்ட மேலாளா் பன்னாலால் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கரூா் அருகே தனியாா் தொழிற்சாலைக்கு சொந்தமான ஆளில்லா ரயில் வழித்தடத்தில் சனிக்கிழமை மாலை 6 மணியளவில் கல்லூரி மாணவா்கள் பயணித்த பேருந்து மீது ரயில் என்ஜின் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த ரயில் வழித்தடம் 1969 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த வழித்தடம் தனியாா் தொழிற்சாலைக்குச் சொந்தமானது. இந்த ரயில் வழித்தடத்தின் மீதான கட்டுப்பாடு மற்றும் பொறுப்பு முழுமையாக தனியாா் தொழிற்சாலைக்கே உரித்தானது.
இந்த ரயில் வழித்தடத்துக்கும், ரயில்வே நிா்வாகத்துக்கும் எவ்வித தொடா்பும் இல்லை. ஆளில்லாத ரயில்வே கேட் பகுதியில் நடந்த விபத்து தொடா்பாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரயில்வேக்கு சொந்தமான வழித்தடங்களில் ஆளில்லாத ரயில்வே கிராசிங் இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உள்பட்ட 150 ஆளில்லா ரயில் கிராசிங்குகளில் டிஜிட்டல் இன்டொ்லாக் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டு முழுமையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
இந்த ரயில்வே வழித்தடங்களைக் கடக்கும் பொதுமக்களின் நலனுக்காக பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதுடன் முழுமையாக பொதுமக்களுக்கு உள்ளூா் மொழியில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உள்பட்ட 15 ரயில் நிலையங்களில் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, மூன்று ரயில் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக குன்னூா், உதகமண்டலம், சின்ன சேலம் ஆகிய ரயில் நிலையங்களில் பணிகள் முடிவடைந்து திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. மீதமுள்ள ஒன்பது ரயில் நிலையங்களிலும் அம்ரித் பாரத் திட்டப் பணிகள் ஏப்ரல் மாதத்துக்குள் முடிவடையும் என்றாா்.
பேட்டியின்போது, சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளா் சரவணன் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.